தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தின்போது விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று (ஆக.15) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களது ஒப்புதலுடன் இரட்டிப்பு ஊதியம், மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 38 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 25 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு முரண்பாடும் என மொத்தம் 64 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.