கரோனா இரண்டாவது அலை பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட நூலகங்கள், 75 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை திறக்கப்பட்டன.
கரோனா இரண்டாவது அலையின் ஏற்பட்ட நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் முதல் வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டது போல நூலகங்களும் மூடி வைக்கப்பட்டன.
கரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து நூலகங்களும் பொதுமக்கள் வருகைக்காக 75 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
இதன்படி தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், 58 கிளை நூலகங்கள், 48 ஊா்ப்புற நூலகங்கள், 4 பகுதி நேர நூலகங்கள் ஆகியவை பொதுமக்கள் வருகைக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டன.
இதன் மூலம் வாசகா்கள், போட்டித் தோ்வுக்குப் பயிற்சி பெறுபவா்கள் உள்ளிட்டோா் வரத் தொடங்கினா். இவா்களுக்கு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாயிலில் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.
65 வயதிற்கு மேற்பட்டவா்கள், பல்வேறு நோய் வாய்ப்பட்டவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை என அலுவலா்கள் தெரிவித்தனா்.