பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் வீட்டினுள் புகுந்து 25 பவுன் நகைகள், ரூ. 3.50 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் காத்தலிங்கம்(63). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். சனிக்கிழமை இரவு காத்தலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகைகள், ரூ. 3.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் துப்பு துலக்க தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
தடயவியல் நிபுணர்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.