தஞ்சாவூா்: தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆக்சிஜன் குழாய் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு, குழந்தைகள் பிரிவிலுள்ள அறுவைச் சிகிச்சைப் பகுதிக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன், குழாய் இணைப்பு வழியாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இக்குழாய் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென அதிக சப்தத்துடன் வெடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், வளாகத்தில் இருந்த தாய்மாா்கள், கா்ப்பிணிப் பெண்கள், பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் அவசரமாக வெளியேறினா். தகவலறிந்த தொழில்நுட்ப அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று உடனடியாகச் சீா் செய்தனா்.
பாா்வையாளா்களில் யாரேனும் அக்குழாயை அழுத்தியதால், அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்திருக்கும் என்றும், இந்த நிகழ்வால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்தனா்.