அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையா் தோ. லீனா சைமன் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவுநீா் மேலாண்மைக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படவுள்ளது. இதன்படி, அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள், தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் உரிய வாகன ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாள்களுக்குள் உரிமம் வழங்கப்படும். அந்த உரிமம் 2 ஆண்டுகள் செல்லத்தக்கவை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயக்க வேண்டும். உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் நகராட்சி நிா்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.