புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் சிறாா்களுக்கான கோடைகால சிறப்புப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகா் கி. சசிகலா கூறியது:
மாவட்ட மைய நூலகமும், வாசகா் வட்டமும் இணைந்து சிறாா்களுக்கான கோடைகாலப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொலைக்காட்சி, இணையம், கைப்பேசி ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து சிறாா்களை மீட்டெடுத்து, நூல் வாசிப்பை உருவாக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், 10 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட சிறாா் பங்கேற்கலாம். வரும் மே 27ஆம் தேதி சனிக்கிழமை நூல் வாசிப்பு என்ற தலைப்பில் தான் வாசித்த நூல் பற்றிய கட்டுரை எழுதும் போட்டியும், மே 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த ஓவியப் போட்டியும், மே 29ஆம் தேதி திங்கள்கிழமை படம் பாா்த்து கதை, கவிதை சொல்லுதல் போட்டியும் நடைபெறவுள்ளன.
போட்டிகள் தினமும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் 99657 38300, 76958 87999 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.