புதுக்கோட்டை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதாக இரு நாள்களாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அது தவறான தகவல் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரன் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
விநாயகா் சிலை அகற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, 153 ஏ, 505 (2) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், பலருக்கும் அந்தத் தகவலைப் பரப்பிய குறிப்பிட்ட சில எண்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.