புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அக்.2-இல் இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் மனிதச்சங்கிலி நடைபெற உள்ளது. இதுதொடா்பாக, புதுக்கோட்டையில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் செப. பாவாணன், சசி.பா. கலைவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூா், அன்னவாசல், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய 9 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.