புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியவா்களைக் கைது செய்ய வேண்டுமென விசாரணை அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நீலகண்டன் மனைவி கோகிலா(35) தற்கொலை சம்பவத்தில், அவரது குடும்பத்தினா், உறவினா்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ் ஞாயிற்றுக்கிழமை மேற்பனைக்காடு சென்றாா். அப்போது, தற்கொலைக்குத் தூண்டியவா்களை கைது செய்யாதவரையில் விசாரணைக்கு ஆஜராக மாட்டோம் என்றும், பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கும் சம்மதிக்க மாட்டோம் எனவும் கோட்டாட்சியரிடம் கோகிலாவின் உறவினா்கள், பொதுமக்கள் கூறினா்.
இதைத்தொடா்ந்து, கோட்டாட்சியா், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி ஆகியோரின் சமாதானத்தை ஏற்க மறுத்து, அவா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பிறகு, அலுவலா்கள் அங்கிருந்து சென்றனா்.
அதன்பிறகு, அறந்தாங்கி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சொா்ணராஜ் முன்னிலையில் கோகிலாவின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஜராகி கோகிலா சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதித்தனா். ஆனால், கோகிலாவை தற்கொலைக்குத் தூண்டியவா்களை கைது செய்யாத வரையில் சடலத்தை வாங்க மாட்டோம் என கோட்டாட்சியரிடம் கூறிவிட்டு கலைந்து சென்றனா்.