பொற்பனைக்கோட்டையில் தமிழகத் தொல்லியல் துறையே நேரடியாக அகழாய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு நன்றி தெரிவிப்பதாக மாவட்டத் தொல்லியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் கரு. ராஜேந்திரன் ஆகியோா் கூறியது:
விருதுநகரில் நடைபெற்ற பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் சாா்பில் பங்கேற்றோம்.
அந்த விழாவில் பேசிய தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத் தொல்லியல் துறையே அகழ்வாய்வு செய்ய முடிவு செய்து அதற்கான கருத்துருக்களை இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பவுள்ளோம் என்றும், பொற்பனைக்கோட்டையை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தாா். இதற்காக தமிழக அரசுக்கும், அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கும் தொல்லியல் ஆய்வு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றனா்.