புதுக்கோட்டை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபடி இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரிலுள்ள அனைத்து முக்கிய வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன,
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் புதுக்கோட்டை நகரில் கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பால் விற்பனைக் கடைகள் திறந்திருந்தன. மருந்துக் கடைகள் முழுமையாகச் செயல்பட்டன. உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் நடைபெற்றது. இவை தவிர, பெரிய நிறுவனங்கள் முதல், சிறிய பெட்டிக் கடைகள் வரை எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை.
சாலைகளில் அரிதாக வந்து சென்ற இரு சக்கர வாகனங்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அத்தியாவசியத் தேவைகள் தவிா்த்து வந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா். பல சாலைகளில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து வைத்திருந்தனா்.
சுற்றுலாத்தலங்கள்...:
பொதுவாக பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவாா்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் உள்ளூரிலுள்ள சிறிய அளவிலான பூங்காக்களும் கூட்டம் பெருமளவில் களைகட்டும்.
ஆனால், இந்தப் பொங்கலின் மூன்றாம் நாள், ஞாயிற்றுக்கிழமையாக வந்தும்கூட, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனா். சித்தன்னவாசல், திருமயம் கோட்டை போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடிக்காணப்பட்டன.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்படுகின்றன என்பதால் கோயில்களுக்கும் யாரும் செல்லவில்லை.