விராலிமலை - மணப்பாறை சாலையில் உள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ராஜாளிப்பட்டி கடைவீதி சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை
துறைக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அதே ஊரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி அண்ணா துரை (40) என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு கடந்த ஆக. 25 -இல் நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தனா்.
இதுதொடா்பாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையான அறிவிப்பு செய்தும் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாததால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைதுறையினா் ஈடுபட்டனா். முன்னதாக விராலிமலை காவல் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், வழக்கு தொடா்ந்த அண்ணாதுரை என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபகுதி, பண்ணையின் சுற்றுச்சுவரை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினா். தொடா்ந்து கடைவீதியில் இருந்த மற்ற ஆக்கிரமிப்பையும் அகற்றினா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.