புதுக்கோட்டையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு் திட்டத்தின்கீழ் தொழுநோய் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இந்தப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 61 தொழுநோயாளா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு முறைப்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது மொத்த மக்கள் தொகையில் 10 ஆயிரத்தில் 0.03 விகிதமாகும். தொழுநோயாளா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் முழுமையான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தொழுநோயைக் கண்டறிய வீடுகளுக்கு வரும் களப்பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, துணை இயக்குநா் (தொழுநோய்) சிவகாமி, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.