பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகளுக்குச் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 25 வயது வரையுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ. 400 வழங்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையும் பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 350 செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப் பள்ளியில் சேர விரும்பும் மாணவா்கள் தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்-1, மதனகோபாலபுரம், 4 ஆவது தெரு, பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது 04328-275466, 8072519559 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.