தொழிலாளா் தினத்தன்று விடுமுறை அளிக்காத 29 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் கா. மூா்த்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அதன் விவரம்: தொழிலாளா் தினமான திங்கள்கிழமை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டத்தின் கீழ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பணிகளுக்காக பணியாற்றும் பணியாளா்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாள்களுக்குள் மாற்று விடுமுறை அளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.
இந்நிலையில் சென்னை தொழிலாளா் ஆணையரின் உத்தரவின்படியும், திருச்சி மண்டல கூடுதல் மற்றும் இணை ஆணையரின் அறிவுறுத்தல்படியும், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் கா. மூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் 52 நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 15 உணவகங்கள் உள்பட 29 வணிக நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் அபராதம் விதித்துள்ளனா்.