பெரம்பலூா் அருகேயுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பருத்தி விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் கோயம்புத்தூா் மண்டல நிலையம் சாா்பில், பருத்தி சாகுபடி செய்யும் ஆதிதிராவிட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத் தலைவரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் நேதாஜி வே.ஏ. மாரியப்பன் முன்னிலை வகித்தாா்.
வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, தமிழக அரசின் விவசாயிகளுக்கான வேறுபட்ட திட்டங்கள் குறித்தும், முதன்மை விஞ்ஞானி ச. மாணிக்கம், மிக நீண்ட இழை பருத்தி மகசூலை அதிகரிக்க பயிா் இனப்பெருக்கத்தின் தொழில் நுட்பங்கள் குறித்தும், பூச்சியியல் துறை முதன்மை விஞ்ஞானி கு. ரமேஷ், நீண்ட இழை பருத்தி சாகுபடியில் பூச்சி மேலாண்மை குறித்தும், மூத்த விஞ்ஞானி அ. சம்பத்குமாா், நீண்ட இழை பருத்தியில் நோய் மேலாண்மை குறித்தும், மு. புனிதாவதி பருத்தியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும், தொழில்நுட்ப வல்லுநா் தோம்னிக் மனோஜ் பருத்தியில் பூச்சிக் கொல்லி தோ்வு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி செய்வதற்கான இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக, முதன்மை ஆராய்ச்சியாளரும், முதுநிலை விஞ்ஞானியுமான க. சங்கா் கணேஷ் நன்றி கூறினாா்.