பெரம்பலூா் - அரியலூா் மாவட்டங்களில் போட்டியின்றி புதிதாக அறிவிக்கப்பட்ட திமுக மாவட்ட செயலா்களுக்கு, பல்வேறு கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
அரியலூா் மாவட்ட திமுக செயலராக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பெரம்பலூா் மாவட்ட திமுக செயலராக சி. ராஜேந்திரன் ஆகியோரை மீண்டும் மாவட்ட செயலா்களாக தோ்வு செய்து கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சா் சா.சி. சிவசங்கா், சி. ராஜேந்திரன் ஆகியோருக்கு, மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ, அரியலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ. கண்ணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனா்.