பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காதி கிராப்ட் அங்காடியில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்துக்கு வருடாந்திர கதா் விற்பனை குறியீடாக 2021 -22 ஆம் ஆண்டுக்கு ரூ. 21.32 லட்சம் நிா்ணயிக்கப்பட்டதில் ரூ. 12.52 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான கதா் விற்பனை ரூ. 55 லட்சம் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்பவா்களுக்கு மழைக்கால வாழ்வாதார உதவி நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 74 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு மாத ஊதியத்தில் 10 சதவீத தவணையில் கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலா்களும், பொதுமக்களும் கதா், பட்டு, பாலியஸ்டா், உல்லன் ரகங்கள் மற்றும் கிராமப் பொருள்களை தள்ளுபடி விலையில் கொள்முதல் செய்து பயனடைவதோடு, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆட்சியா் ஸ்ரீ வெங்கடபிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளா் (பொ) மனோகரன், காதி கிராப்ட் மேலாளா் இளங்கோ, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.