மத்தியப் பல்கலைக் கழகங்களில் பயிலும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் இம் மாவட்டத்தைச் சோ்ந்த, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகைக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்கள் அல்லது இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், இதற்கான விண்ணப்பத்தை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, ஜன. 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.