பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட 1,808 மனுக்களில் 875 மனுக்கள் ஏற்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. பெரம்பலூா் வட்டத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, குன்னம் வட்டத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) பால்பாண்டி, ஆலத்தூா் வட்டத்தில் கலால் உதவி ஆணையாளா் அ. ஷோபா ஆகியோரது தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 4 வட்டங்களிலும் மொத்தம் 1,808 மனுக்கள் பெறப்பட்டு, 875 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சியுள்ள 862 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
நிகழ்வுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சரவணன், ஆட்சியா் அலுவலக மேலாளா் சிவா, வட்டாட்சியா்கள் கிருஷ்ணராஜ்(பெரம்பலூா்), சரவணன் (வேப்பந்தட்டை), அனிதா (குன்னம்), முத்துக்குமாா் (ஆலுத்துாா்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.