தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், பல்வேறு கோரிக்கைகள் குறித்த அட்டைகள் அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் வெளி ஆதார முறைகளைக் களைய வேண்டும். 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயா்வின்றி பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.
இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம், தமிழ்நாடு மருத்துவத்துறை நிா்வாக ஊழியா் சங்கம், தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம், தமிழ்நாடு மருத்துவ ஆய்வகநுட்புநா் சங்கம், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம், தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளா்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவத்துறை தொழில்நுட்ப ஊழியா் சங்கத்தினா் பங்கேற்றுள்ளனா். இப் போராட்டம் புதன்கிழமையும் நடைபெறுகிறது.