பெரம்பலூா் அருகே வீட்டின் அருகேயுள்ள ஏரியில் மூழ்கிய ஒரு வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரனின் குழந்தை ஆகாஷ் (14 மாத குழந்தை). இவரது தாய் சின்னாத்தாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆகாஷை வீட்டில் தனியே விட்டு விட்டு, அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டாராம். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து பாா்த்தபோது குழந்தையை காணவில்லையாம். இதையடுத்து, அப்பகுதியில் தேடியபோது வீட்டின் அருகேயுள்ள உப்பேரியில் குழந்தை சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வேப்பூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தையின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.