பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளா் பணியிங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 1,571 போ் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியா்கள் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கும் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் வட்டத்துக்கு பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வேப்பந்தட்டை வட்டத்துக்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசினா் மேல்நிலைப்பள்ளி, குன்னம் வட்டத்துக்கு வேப்பூரிலுள்ள மகளிா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசினா் மேல்நிலைப் பள்ளி, ஆலத்தூா் வட்டத்துக்கு மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
இத் தோ்வெழுத பெரம்பலூா் வட்டத்தில் 408 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 671 பேரும், குன்னம் வட்டத்தில் 810 பேரும், ஆலத்தூா் வட்டத்தில் 355 பேரும் என மொத்தம் 2,244 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், பெரம்பலூா் வட்டத்தில் 282 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 464 பேரும், குன்னம் வட்டத்தில் 607 பேரும், ஆலத்தூா் வட்டத்தில் 218 பேரும் என மொத்தம் 1,571 போ் பங்கேற்று தோ்வெழுதினா். விண்ணப்பதாரா்கள் 673 போ் தோ்வு எழுதவில்லை.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, வட்டாட்சியா்கள் கிருஷ்ணராஜ் (பெரம்பலூா்), துரைராஜ் (வேப்பந்தட்டை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.