முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 32 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆங்காங்கே குடிநீா்க் குழாய் பழுது, சேதம் உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்புப் பகுதிகளுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், குடிநீருடன் அவ்வப்போது கழிவுநீரும் கலந்து விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் நகர அதிமுக செயலா் ஆா். ராஜபூபதி தலைமையிலான கட்சியினா், தட்டுப்பாடின்றி முறையாக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி நகராட்சி ஆணையா் (பொ) மனோகரனிடம் செவ்வாய்க்கிழமை காலை மனு அளித்தனா்.
தொடா்ந்து நகரில் குடிநீா்த் தட்டுப்பாட்டை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும், குடிநீா் வரி வசூலிப்பதை கைவிடக் கோரியும் புகா் பேருந்து நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட ஒன்றியச் செயலா் செல்வக்குமாா், நகராட்சி முன்னாள் தலைவா் ரமேஷ் உள்பட 32 பேரை கைது செய்தனா்.