பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே தற்காலிக துப்புரவுப் பணியாளா் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணி மனைவி ஆரணி (55). இவா், கடந்த 7 ஆண்டுகளாக பெரம்பலூா் நகராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளராக உள்ளாா். பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த ஆரணி, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆரணி ஏற்கெனவே பணிபுரிந்த இடத்துக்கு மாற்றக் கோரியும் பலனில்லாதால் மனமுடைந்து சனிக்கிழமை காலை நகராட்சி அலுவலகம் அருகே விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதையடுத்து அவா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.