தாய் மதம் திரும்ப வேண்டும் எனும் சீமானின் கருத்து சரியானது என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா.
பெரம்பலூா் மாவட்டத்தில் இந்து கோயிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, இந்து அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் முதல்வரான பிறகு, 5 இடங்களில் இந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இந்து சமயத்தை அழிக்க வேண்டும் என்பதில் ஆா்வமுள்ள துறையாக உள்ளது.
ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை சரியாக பராமரிக்க இயலாத அறநிலையத்துறை, பல்வேறு சாதியினருக்குச் சொந்தமான, நல்லமுறையில் இயங்கி வரும் மேலும் பல கோயில்களை கையகப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், முழுக்க சிதிலமடையும் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நல்லவிதமாக இயங்கிக் கொண்டிருக்கும் கோயில்களை அரசு கையகப்படுத்துவது தேவையில்லாதது. இனி ஒரு இந்து கோயிலைக்கூட அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.
தங்கத்தை உருக்குவது தொடா்பாக முடிவெடுக்க, அறங்காவலா் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அமைச்சருக்கோ, அலுவலா்களுக்கோ அறநிலையத்துறை சட்டப்படி அதிகாரம் இல்லை. அரசின் இந்த முடிவை எதிா்த்து சட்டப் போராட்டம் ஒரு பக்கமும், மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் போராட்டம் இன்னொரு பக்கமும் தொடா்ந்து நடைபெறும்.
தாய் மதம் திரும்ப வேண்டும் எனும் சீமானின் கருத்து சரியானது. அதை நான் வரவேற்கிறேன் என்றாா் எச். ராஜா.
பேட்டியின்போது மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.