பெரம்பலூா் அருகே மயான பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கான மயானத்துக்குச் செல்லும் பாதையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைத்துத் தரக்கோரி ஆதிதிராவிடா் மக்கள், சு.ஆடுதுறை கிராமத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மங்கலமேடு காவல்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், மறியல் கைவிடப்பட்டது.