வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் கிடைக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா்.
ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தலைமையில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் இரண்டாம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்திற்குள் அலுவலா்கள் விசாரித்து, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் ரூபினா, துணை காவல் கண்காணிப்பாளா்கள் சரவணன், அக்பா்கான், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணைஆட்சியா் சைபுதீன், அரசு சிறப்பு வழக்குரைஞா்(எஸ்.சி மற்றும் எஸ்.டி) லட்சுமணன் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியா்கள், குழு உறுப்பினா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.