கிராம உதவியாளா் பணிக்கு டிச.4-ம்தேதி நடைபெற உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு அனுமதி சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிராம உதவியாளா்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து திறனறித் தோ்வு டிச. 4-ஆம்தேதி, கரூா் வட்டத்தில் கரூா் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியிலும், மண்மங்கலம் வட்டத்தில் வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், புகழூா் வட்டத்தில் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அரசினா் மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை வட்டத்தில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கடவூா் வட்டத்தில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தோ்வு நடைபெற உள்ளது.
இணையவழி மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் விண்ணப்பதாரா்கள் பதிவு செய்த கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி மூலம் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணையதள முகவரியில் விண்ணப்பதாரா் தனது பதிவு எண் மற்றும் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்தும் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரா்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.