கரூரில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரக நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து தொடங்கிய நடைப்பயணம் மீண்டும் வெங்கமேடு காமராஜா் சிலை அருகில் முடிந்தது.
நடைப்பயணத்தில் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாா் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் சுப்ரமணியம், வடக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்டீபன் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், தமிழக நிதி அமைச்சா் தியாகராஜன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாஜக வன்முறை அரசியலை நடத்துகிறது. பாஜகவின் தேசபக்தி போலியான தேச பக்தி. மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை 2024 ஆம் ஆண்டு அகற்றியே தீருவோம் என்றாா்.