மத்திய அரசைக் கண்டித்து, கடவூரில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சத்தியாகிரக நடைப்பயணம் மேற்கொண்டனா்.
கடவூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நடைப்பயணத்துக்கு கட்சியின் மாவட்டப் பொருளாளா் மெய்ஞானமூா்த்தி தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். கடவூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் மலையாண்டி, மாவட்டத் துணைத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடவூா் கடைவீதியில் தொடங்கிய நடைப்பயணம் பாலவிடுதி, ரெட்டியப்பட்டி வழியாக சுமாா் 20 கி.மீ. தொலைவுள்ள தரகம்பட்டி கடைவீதியில் நிறைவு பெற்றது. இந்த நடைப்பயணத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சேங்கல் மணி, கிருஷ்ணராயபுரம் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் வட்டாரத் தலைவா் மாணிக்கம், மேலப்பகுதி ஊராட்சித் தலைவா் மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.