கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஜவாத் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வங்கக்கடலில் உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடா் மழை பெய்து வந்தது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 19 குளங்கள் 60 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. மேலும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 107 சிறு பாசன குளங்களும் 75 சதவீதம் நிரம்பின. ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 833 குளங்களில் மூன்று குளங்கள் 100 சதவீதம் நிரம்பியிருந்தன. மற்ற குளங்கள், ஊரணிகள் 75 சதவீதம் நிரம்பியிருந்தன.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக மழை பெய்யாததால் குளங்கள், ஊரணிகள் அனைத்தும் 100 சதவீதம் நிரம்பாதா என விவசாயிகள் கவலையில் இருந்தனா்.தற்போது, மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜவாத் புயல் காரணமாக கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 11 மணி வரை அவ்வப்போது தூறலும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது.
கரூா் நகா் பகுதியில் பெய்த பலத்த மழையால் சுங்ககேட், உழவா்சந்தை, திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகன முகப்பு விளக்கை எரியவிட்டவாறும், ஊா்ந்தவாறும் சென்றன. தொடா்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.