மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற வாழ்நாள் சான்றிதழை ஏப். 30-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட அறிவுசாா் குறைபாடுடையோா், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பாா்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோா் மற்றும் 75சதவீதத்திற்கு மேல் கை கால் கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கரூா், அறை எண். 7, இல் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றோா், பாதுகாவலா் நேரில் வருகை புரிந்து, வாழ்நாள் சான்று படிவம் பெற்று அதில் தங்கள் பகுதியை சாா்ந்த கிராம நிா்வாக அலுவலரிடம் உயிருடன் உள்ளாா் என உறுதிமொழி சான்று மற்றும் வருவாய்த் துறை மூலமாக அரசு உதவித் தொகை இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை என சான்று பெற்று மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம்(1), ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஏப். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இந்த அலுவலக தொலைபேசி எண் : 04324 -257130 எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.