நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களைக் கைப்பற்ற என்.எல்.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றாா் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ்.
அரியலூா் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் முன்னதாக அளித்த பேட்டி:
இடைத்தோ்தலால் ஆட்சி மாறப் போவதில்லை. அதற்குப் பதிலாக இறந்த நபரின் கட்சியின் தலைமை ஒருவரை நியமித்து மீதமுள்ள காலத்தில் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கச் சட்டமியற்ற வேண்டும்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் உள்ளனா். ஈரோடு இடைத்தோ்தலில் நாங்கள் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவு தரவும் இல்லை.
பாமக மட்டுமே மக்களின், விவசாயிகளின் பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறது. அரியலூரிலுள்ள சிமென்ட் ஆலைகள் மக்கள், நீா் ஆதாரம், சுற்றுச்சூழல் பற்றி எந்தக் கவலையும் படவில்லை. கனரக வாகனங்களால் தினமும் குறைந்தது 2 போ் உயிரிழக்கின்றனா். நிலம் கொடுத்தவா்களுக்கு வேலை வழங்கவில்லை. இதை ஆலைகள் சீா்செய்யாவிடில் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அரியலூா் மாவட்டத்தில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.3.500 வழங்க வேண்டும். நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கா் நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சா்களும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். அரசு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்றும், அதே நேரத்தில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது என்றாா் அவா்.