அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கட்சிக்காக உயிா்நீத்தவரின் குடும்பத்தினரை மதிமுக தலைமைச் செயலா் துரைவைகோ புதன்கிழமை இரவு சந்தித்தாா்.
திருமானூரை அடுத்த விழுப்பணங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் இடிமழை உதயன் என்கிற உதயகுமாா். திமுக பேச்சாளராக இருந்த இவா், வைகோ மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தாா். கடந்த 1993-இல் வைகோ, திமுகவை விட்டு வெளியேறியபோது, இடிமழை உதயன், திருமானூா் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இந்நிலையில், மதிமுக தலைமைச் செயலா் துரைவைகோ, விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் உள்ள இடிமழை உதயன் வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்து, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, மதிமுக அரியலூா் மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் தங்கவேல், திருமானூா் ஒன்றியச் செயலாளா்கள் மாணிக்கவாசு (மே), ராமகிருஷ்ணன்(கி) உள்பட பலா் உடனிருந்தனா்.