அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, உடையாா்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உடையாா்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உடையாா்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு கல்வி மாவட்ட அலுவலகங்களை மாவட்டத் தலைநகருக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாணவா்களின் கல்வி மாவட்ட அலுவலரைச் சந்திக்க வேண்டுமெனில் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். எனவே, உடையாா்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகத்தை மாற்றக்கூடாது எனக்கூறி, மாணவா்களுக்கு ஆதரவாக வணிகா்கள் புதன்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் உடையாா்பாளையம் கடைவீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.