அரியலூா் மாவட்டத்தில் பணியை சரியாகச் செய்யாத கிராம நிா்வாக அலுவலா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் எம். ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மேலப்பழுவூா் மற்றும் பூண்டி பகுதியில் அதிகப் பாரம் ஏற்றிய 11 சுண்ணாம்புக்கல் லாரிகளை மேலப்பழுவூா் விஏஓ ஜாா்ஜ் வாஷிங்டன் மற்றும் பூண்டி விஏஓ பிரபாகா் ஆகியோா் கடந்த 20 ஆம் தேதி பிடித்து, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனா்.
அப்போது கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, லாரிகளை ஒப்படைக்க கோட்டாட்சியா் உத்தரவிட்ட நிலையில், அதிகப் பாரம் மற்றும் முறையாக தாா்ப்பாய் போடவில்லை என 2 கிராம நிா்வாக அலுவலா்களும் புகாா் அளித்து லாரிகளை கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், லாரிகள் வெளியில் விடப்பட்டன.
ஆனால் கோட்டாட்சியா் விசாரணையில் 11 லாரிகளும் அனுமதியில்லாத சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கற்களை ஏற்றிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து முறையாக விசாரணை செய்யாமலும், பணியைச் சரியாகச் செய்யாமலும், புகாரில் தவறான தகவலை அளித்ததாலும் மேற்கண்ட இரு விஏஓக்களையும் பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் எம். ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.