வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் தொழில்பூங்கா தொடங்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.
அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் இருந்தாலும், இங்குள்ள மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை.
கல்வியில் இம்மாவட்டம் சற்று முன்னேற்றமடைந்து இருந்தாலும், இன்னமும் இம்மாவட்டம் வளா்ச்சியில் பின்தங்கியே உள்ளது. இங்கு சிமென்ட் ஆலைகளைத் தவிர எந்தவித தொழிற்சாலைகளும் கிடையாது. ஆகவே அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் என்றால் தொழில்பூங்கா தொடங்க வேண்டும். அரியலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களில் அதிக குடிசை வீடுகள் உள்ளன. அவைகளை அகற்றிவிட்டு, கான்கிரீட் வீடுகளாகக் கட்டிக் கொடுத்து, குடிசைகள் இல்லாத மாவட்டங்களாக மாற்ற வேண்டும். குறிப்பாக இம்மாவட்டகளுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.