அரியலூா் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நகராட்சிகள்... அரியலூா்...அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள கொடி கம்பத்தில், நகா் மன்றத் தலைவா் க.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா். இந்நிகழ்வில், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.
ஜயங்கொண்டம்...ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகா் மன்றத் தலைவா் எஸ்.சுமதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினாா். துணைத் தலைவா் வே.கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையா், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பேரூராட்சிகள்... உடையாா்பாளையம் பேரூராட்சி அலுவவலக வளாகத்தில், அதன் தலைவா் மலா்கொடி, வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், அதன் தலைவா் மாா்கிரேட் அல்போன்ஸ் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினாா். நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
ஊராட்சி ஒன்றியங்கள்... அரியலூா் ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கொடி கம்பத்தில், தேசியக் கொடியை ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மகாத்மா காந்தி திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன், துணைத் தலைவா் சரஸ்வதி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.
ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஒன்றியக் குழு உறுப்பினா் என்.ரவிக்குமாரும், திருமானூா் ஊராட்சி ஒனறிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.சுமதியும், தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் வி.மகலாட்சுமியும், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.தேன்மொழியும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் மருதமுத்தும் தேசியக் கொடியை ஏற்றி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா்.