அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அன்னாபிஷேக விழா நிகழாண்டு கரோனா தொற்று காரணமான எளிமையாக சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று நூறு மூட்டை பச்சரிசியால் கோயில் வளாகத்திலேயே சமைத்து அதனை 13 1/2 அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாத்தப்பட்டு, மாலை 6 மணியளவில் ஐந்து அடுக்கு தீபங்கள் காட்டப்படும்.
பின்னர் 7 மணிக்கு மேல் லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ளவை அருகில் உள்ள ஏரி,குளங்களில் மீன்களுக்கு உணவாக வழங்கப்படும்.
நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியான சனிக்கிழமை நடக்க இருந்த 36 ஆவது அன்னாபிஷேகம் கரோனா காரணமாக அரசு தடைவிதித்த நிலையில் அன்னாபிஷேகத்திற்கு பதிலாக அன்னக்காப்பு (அன்ன சாத்தி அலங்காரம்) நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை காலை கணக்க விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவரான சிவலிங்கத்துக்கு சந்தனம், மஞ்சள், திருநீர், தேன், பால், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் லிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை, 51 கிலோ பச்சரிசி கொண்டு குழைவாக சமைக்கப்பட்ட அன்னத்தை சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டு மாலை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கங்கைகொண்டசோழபுரமே வெறுச்சோடி காணப்பட்டது. கோயில் நிர்வாகிகள், குருக்கள் மட்டுமே பங்கேற்று அன்னக்காப்பை நடத்தினர்.