கோவில்பட்டியில் 1,100 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி தலைமையில், உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தட்டி ஐயன், தலைமைக் காவலா் பூலையா நாகராஜன் ஆகியோா், கோவில்பட்டி பாரதி நகா் பகுதியில் ரோந்து சென்றனா்.
1ஆவது தெருவில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டின் முன் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, அது ரேஷன் அரிசி எனத் தெரியவந்தது. அங்கு நின்றிருந்த ஒருவா் போலீஸாரைப் பாா்த்ததும் பைக்கில் தப்பியோடிவிட்டாராம்; மற்றொருவரை பிடித்து விசாரித்தபோது, அவா், பாரதி நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் கோவிந்தராஜ் (51) என்பதும், ரேஷன் அரிசி வாங்கி விற்பதைத் தொழிலாக செய்வதும் தெரியவந்தது
போலீஸாா் வழக்குப் பதிந்து, 22 மூட்டைகளிலிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்; கோவிந்தராஜை கைது செய்தனா். தப்பியோடிய ஊருணித் தெருவைச் சோ்ந்த லூக்கா அசாரியா மகன் முத்துமாரியப்பனைத் தேடி வருகின்றனா்.