தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 3ஆம் சுற்று தடுப்பூசி முகாம் புதன்கிழமை (மாா்ச் 1) தொடங்குகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 3 மாதங்களுக்குக் குறைவான கன்றுகள், கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகள் தவிர அனைத்து கால்நடைகளுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் இலவசமாக கால்-வாய் நோய்த் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்குகிறது.
இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் வராமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம். இப்பணிக்காக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது நடைபெறவுள்ள 3ஆம் சுற்று முகாமில் அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.