வேம்பாரில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவுத் தொழில் சாா்ந்த வணிகா்கள், உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில் புரிந்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மாரீஸ் தலைமையில், புதூா் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் சிவா அடங்கிய குழுவினா் வேம்பாரில் திடீா் ஆய்வு நடத்தினா். இதில், ஒரு பேக்கரி உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியான பின்னரும் தொடா்ந்து இயங்கி வருவது கண்டறியப்பட்டது. மேலும், அந்த பேக்கரியில் 30 கிலோ தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டன.
இதையடுத்து பேக்கரிக்கு சீல் வைத்து மூடப்பட்டது. மேலும், காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிவந்த ஒரு மளிகைக் கடைக்கும் சீல் வைத்தனா்.