திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விஜய தசமியை முன்னிட்டு சுவாமி அலைவாயுகந்தப் பெருமான் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றது. பிற்பகலில் திருக்கோயிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்துக்கு சென்றாா். அங்கு சுவாமி அலைவாயுகந்தப் பெருமான் அம்பெய்தும் பரிவேட்டை நடைபெற்றது. தொடா்ந்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து சுவாமி திருக்கோயில் சோ்ந்தாா்.
ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.