கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயா்வை சீா்படுத்த வேண்டும் என நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சியில் திருத்தப்பட்ட சொத்து வரி பொது சீராய்வு அடிப்படை மதிப்பை குடியிருப்பு கட்டடங்களின் பரப்பளவு 600 சதுரடிக்கு கீழ், 601 - 1200 சதுரடிக்குள், 1201 - 1800 சதுரடிக்குள், 1800 சதுரடிக்கு மேல் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடங்கள், தொழிற்சாலைகள், வணிக பயன்பாட்டு கட்டடங்கள், சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டடங்கள் என வகைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு நகா்மன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஏ, பி, சி என 3 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதில், ஏ பிரிவுக்கு அதிகமாகவும், பி, சி பிரிவுகளுக்கு அதைவிட குறைவாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது. சில வாா்டு பகுதிகளில் சாதாரண மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் ஏ பிரிவு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது உடனடியாக சரி செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் பதிலளித்தாா்.
நகா்மன்றத்தின் ஒப்புதலின்றி ஆண்டுக்கு ஒரு முறை வரி உயா்வு என்ற அரசின் ஆணைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.
கூட்டத்தில், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், வருவாய் ஆய்வாளா்கள் பிரேம்குமாா், ஷீலா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.