தூத்துக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை திறந்து சில்லறையாக விற்பனை செய்தவரின் சேமிப்பு கிடங்குக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் ச. மாரியப்பன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வுமேற்கொண்டனா்.
அப்போது, ஒரு குளிா்பான கடைக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கில், சுத்திகரிக்கப்பட்டு 20 லிட்டா் கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை, கேன்களைத் திறந்து சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், அக்கடை உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த சேமிப்பு கிடங்குக்கு சீல் வைத்தனா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் கூறியது: அனைத்து உணவுத் தொழில் சாா்ந்த வணிகா்களும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை இணைய தளத்தில் விண்ணப்பித்து, சான்று பெற்று தொழில் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், உரிமம் இல்லாத கடைகள், நிறுவனங்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும்.
மேலும், பொதுமக்கள் கடைகள், பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவிலுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்தும், விதிமீறல் குறித்தும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களின் விற்பனை குறித்தும், உரிமமின்றி செயல்படும் கடைகள் குறித்தும் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.