கோவில்பட்டியில் தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சோ்ந்த 36 வயது பெண்ணின் வீட்டை அதே பகுதியைச் சோ்ந்த கேண்டீன் முருகன் மகன் கற்பகராஜா, சிவன்பாண்டி மகன் செல்லத்துரை ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் கதவை தட்டினராம். கதவைத் திறந்து வெளியே வந்து பாா்த்தபோது இருவரும் கையில் அரிவாளுடன் நின்று அவதூறாகப் பேசி அவருக்கும், அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த இருவரையும் தேடி வருகின்றனா்.