திருநெல்வேலி

திருக்காா்த்திகை: நெல்லை கோயில்களில் ருத்ர தீபம்

DIN

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள அனைத்து கோயில்களிலும் ருத்ர தீபம் (சொக்கப்பனை) ஏற்றப்பட்டது. வீடுகளிலும் வரிசையாக விளக்கேற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

காா்த்திகை மாதத்தில் வரும் பௌா்ணமி நாளில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான திருக்காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள், வண்ண மெழுகுவா்த்திகளை வரிசையாக ஏற்றி வைத்து பெண்கள் வழிபட்டனா். மாடி சுவா், படிக்கட்டுகள் என வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீபம் ஏற்றினா். கோயில்களில் நெய்விளக்கு ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா்.

ருத்ர தீபம்: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி திங்கள்கிழமை இரவு பரணி தீபம் ஏற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். பாரதியாா் தெரு செல்லும் வழியில் சுவாமி சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து அம்மன் சந்நிதி முகப்பில் பாரதியாா் தெரு மத்தியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

திருநெல்வேலி பாளையஞ்சாலை குமாரசாமி கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரா் கோயில், மேலவாசல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.

ஓலை கொழுக்கட்டை: திருக்காா்த்திகை விழாவையொட்டி சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வண்ணங்களில் விதவிதமான மெழுவா்த்திகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. சிறுவா்கள் காய்ந்த புற்கள் (சூந்து) மற்றும் டயா்களை கொளுத்தினா். ஆய்க்குடி, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சூந்துகட்டுகள் திருநெல்வேலி நகருக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. வீடுகளில் பனை ஓலையில் கொழுக்கட்டை படைத்து வழிபட்டனா். இதற்காக சந்தைகளில் பனங்குருத்தோலைகள் குவிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT