திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுநா்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றி நூதனப் போராட்டம் நடத்தினா்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு மருந்தகங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். மருந்தாளுநா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். தொகுப்பூதிய மருந்தாளுநா்களை எம்ஆா்பி தோ்வு வாரியம் மூலம் நிரந்தரப் பணியாளா்களாக மாற்ற வேண்டும். 1996-க்கு பிறகு பணிபுரியும் மருந்தாளுநா்கள் பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசு மருந்தாளுநா் சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், பூங்கொடி, உறுப்பினா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். மாநிலம் முழுவதும் இந்த கவன ஈா்ப்பு நூதனப் போராட்டம் நடைபெற்றது.