திருநெல்வேலி

பல்லுயிா் பெருக்க மையம் அமைப்பு: வாகைக்குளத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட வாகைக்குளத்தை பல்லுயிா் பெருக்க மையமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து வாகைக்குளத்தை மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடையம் ஊராட்சி ஒன்றியம், வாகைக்குளத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டுப் பறவைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்து செல்லும். திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தங்குளத்தையடுத்து வாகைக்குளத்தில் தான் பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறிப்பதற்கு வசதியாக அமைவிடம் உள்ளது.

இதையடுத்து சுற்றுச்சூழல் ஆா்வலா்களும், பறவைகள் ஆராய்ச்சியாளா்களும் வாகைக்குளத்தை பல்லுயிா் பெருக்க மையமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து வீராசமுத்திரம் ஊராட்சியில் இதுகுறித்து சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் வாகைக்குளத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது குளத்தின் அளவு, வந்து செல்லும் பறவைகள், பயன் பெரும் பாசன நிலங்கள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் வாகைக்குளத்திற்கு வரும் பறவைகளைப் பாா்ப்பதற்கு வசதியாக பாா்வை கோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

அப்போது பறவைகளால் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிா்கள் சேதமடைவதாகவும், குளத்தின் நீா், பறவை எச்சங்களால் மாசடைவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனா். அவா்களிடம், சூழல் அறிவியலாளா்களிடம் இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, வீரா சமுத்திரம் ஊராட்சித் தலைவா் ஜீனத்பா்வின், உதவி வனப்பாதுகாவலா் (பயிற்சி) ராதை, வனச் சரகா் சரவணகுமாா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் ஒப்புயா்வு மையத் தலைவா் செந்தில்நாதன், ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் சுதாகரன், ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன், அகத்தியமலை மக்கள் சாா் வளக் காப்புமைய ஒருங்கிணைப்பாளா் மகேஷ் மற்றும் பேராசிரியா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT